செங்கம் அருகே விஷம் குடித்து பெண் உயிரிழப்பு
செங்கம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அவதூறாக பேசியதால் மனமுடைந்த பெண் விஷம் குடித்து உயிரிழந்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், வாங்கிய கடனை வசூல் செய்ய செல்லும்போது அவதூறான வார்த்தைகள் பேசும் கைப்பேசியை பிடுங்கி சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரிமலை பாடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி வேலாயுதம் மற்றும் பத்மா தம்பதி. இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வேலாயுதம் விபத்தில் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது மகள் திருமண செலவிற்காகவும், மகன் படிப்பு செலவிற்காகவும், தனியார் நிதி நிறுவனத்தில் பத்மா கடன் பெற்றதாக தெரிய வருகிறது. மாதம்தோறும் கட்டப்படும் தவணை ஒரு சில மாதங்களாக தவறியதால் பத்மா குடியிருக்கும் வீட்டிற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிதி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் நேரில் வந்து பத்மாவை அவதூறாக பேசியதாகவும் அவர் வைத்திருந்த கைபேசியை பிடுங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய பத்மா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இறந்த பத்மா குடும்பத்திற்கு ஆண் துணை இல்லாத நிலையில் தனியாக இருப்பதை அறிந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அடாவடியாக இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபட்டு ஒரு உயிரையே மாய்த்து உள்ளதாகவும், தமிழ்நாடு அரசு கவனம் கொண்டு சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களின் மீதும் , அதில் பணிபுரியும் ஊழியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் கோரிக்கை வைத்தனர்.
மேலும் இது குறித்து செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.