ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வியாபாரிகள் வாக்குவாதம்
Occupy Removal Traders Oppose செய்யாற்றில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பெரியார் சிலையிலிருந்து காய்கறி மார்க்கெட் வரை சாலையில் இருபுறத்திலும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணியை மேற்கொள்ள இடையூறாக அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நெடுஞ்சாலை துறையின் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொள்ள முறையாக அப்பகுதி வியாபாரிகளுக்கு சில தினங்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அதன்படி காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டனர்.
அப்போது சமீபத்தில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமிப்பு செய்து சில வியாபாரிகள் கடையை வைத்து வியாபாரம் செய்ததை பார்த்த அதிகாரிகள் அவர்களிடம் கடையை அகற்றக் கூறினர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றிட கால அவகாசம் வேண்டும் என வாக்குவாதத்தில் வியாபாரிகள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே முறையாக உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீங்கள் அகற்றவில்லை என்றால் நெடுஞ்சாலை துறை மூலம் நாங்கள் அகற்றுவோம் என அதிகாரிகள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர்கள் மற்றும் அவரது ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கழிவுநீர் கால்வாய் அமைப்பதில் முறையாக கட்டுமான பணிகளை பின்பற்றவில்லை, ஒப்பந்தக்காரர் பணி மேற்கொள்ளும் போது அதிகாரிகள் ஏன் பார்வையிட வில்லை என கூறியதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வியாபாரி சங்க நிர்வாகிகளும் வந்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளர் ஜீவராஜ், மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் , வருவாய்த்துறையினர் , நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவிப் பொறியாளா் ஸ்ரீஅரி, உதவிப் பொறியாளா் உதயகுமாா் , வியாபாரிகளை சமாதானம் செய்து ஆக்கிரமிப்பு அகற்றிட ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில் வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.