உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு

கோட்டை நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள்
செய்யாறு அருகே மேல்மா சிப்காட் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் இருவா் மயக்கமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்துக்கு 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், 20 விவசாயிகளை முதற்கட்டமாக தமிழக காவல்துறை கைது செய்தது. பின்னர் இரண்டாம் கட்டமாக 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் தமிழக காவல்துறை கைது செய்தது.
இதற்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்பட்டது. அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தது. இதன் எதிரொலியாக 7 விவசாயிகளின் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் விவசாயத் துறை பட்ஜெட் நடைபெறுவதை முன்னிட்டு மேல்மா கூட்டுச் சாலை அருகே குறும்பூா் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கோட்டை நோக்கி செல்ல முயன்றனா். அப்போது, போலீஸாா் தடுப்பு வேலிகளை அமைத்து விவசாயிகளைத் தடுத்தனா். மேலும், பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. பின்னா், விவசாயிகள் சென்னை செல்லும் பயணத்தை கைவிட்டு, காத்திருக்கும் போராட்டம் நடத்தி வரும் குடிசைக்குச் சென்று, தமிழக முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்து தரும் வரையில் உண்ணாவிரதம் இருப்போம் எனக் கூறி, விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களில், பெருமாள் (பெருநகா்), கணேசன் (குரும்பூா்) ஆகியோா் மயக்கமடைந்தனா்.
உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். மற்ற விவசாயிகள் தொடா்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu