ஆரணி தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா?
திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்பட்டு ஆரணி புதிய மாவட்ட அறிவிப்புக்கு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.
HIGHLIGHTS
தமிழ்நாட்டில் 7 புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பு விரைவில் தமிழக அரசு தரப்பில் இருந்து வெளியாகும் என தகவல்கள் வெளிவருகின்றன.
தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் மேலும் 7 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த தகவலின் படி திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து ஆரணி என்ற தனி மாவட்டம் உருவாகலாம் என்ற தகவல் தற்போது அதிகாரிகள் மத்தியிலும், ஆளுங்கட்சியினர் மத்தியிலும் அதிகம் பேசப்படுவதால் ஆரணி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என ஆரணி பகுதியினரும், செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று செய்யாறு பகுதி மக்களும் அரசுக்கு நெருக்கடி நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், தற்போது ஆரணி தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமையும் என்ற தகவலால் ஆரணி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 1989 இல் வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தையும் பிரிக்க வேண்டுமென்ற குரல்கள் பல்லாண்டுகளாக இருந்து வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் 30.09.1989 ம் ஆண்டு வடாற்காடு மாவட்டத்தில் இருந்து பிரித்து புதியதாக திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்டது. அப்போது 6 வட்டங்கள், 2 வருவாய் கோட்டங்கள் கொண்டிருந்தன .
தற்சமயம் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு ,செங்கம், கீழ்பென்னாத்தூர், சேத்பட், ஜவ்வாதுமலை, கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய 12 வட்டங்களையும், திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி ஆகிய 3 வருவாய் கோட்டங்களையும், 4 நகராட்சிகளையும், 18 ஊராட்சி ஒன்றியங்களையும், 10 பேரூராட்சிகளையும், 860 கிராம ஊராட்சிகளையும் திருவண்ணாமலை மாவட்டம் பெற்றுள்ளது. இதன் பரப்பளவு 6 ஆயிரத்து 188 கி மீ ஆகும்.
எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதால் புதியதாக மாவட்டத்தை ஆரணி தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விரும்புகிறார்கள்.
ஆரணி பட்டு உலகளவில் பிரசித்திபெற்றதால் விருது பெற்றுள்ளது. மேலும் இங்கு உற்பத்தியாகும் சன்னரக அரிசி தேசிய விருது பெற்றுள்ளது. இங்கு நெசவு மற்றும் அரிசி உற்பத்தி தொழிலில் லட்சக்கணக்கானோர் ஈடுபட்டு வருகிறார்கள். மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகரமாக ஆரணி விளங்குகிறது.
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் (டி என் 97), மாவட்ட கல்வி அலுவலகம் ,நீதிமன்றங்கள், கிளைச்சிறை ,ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் 2, நகராட்சி அலுவலகம், மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு பொறியியல் கல்லூரி, தனியார் கல்லூரி, உதவி கோட்ட மின் பொறியாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மூன்று காவல் (நகர, கிராமிய, மகளிர்) நிலையங்கள் மற்றும் பல அலுவலங்களும், பல்வகையான வியாபார நிறுவனங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் ஆரணியில் இயங்கி வருகின்றன.
இங்கு மசூதிகள், தேவாலயங்கள், புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில், கைலாசநாதர் கோயில், வேம்புலியம்மன் கோயில், அரியாத்தம்மன் கோயில், மாரியம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில், ஆஞ்சநேயர் கோயில், பெருமாள் கோயில் உட்பட பல ஆன்மீக ஸ்தலங்கள் ஆரணியில் உள்ளன.
ஜவ்வாதுமலை, கலசப்பாக்கம், போளூர், ஆரணி ஆகிய வட்டங்கள் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கின்றன. ஆரணி கோட்டத்தில் கிழக்கு ஆரணி, மேற்கு ஆரணி, போளூர், கலசப்பாக்கம், புதுப்பாளையம், ஜமுனாமரத்தூர் என 6 ஊராட்சி ஒன்றியங்களும், கண்ணமங்கலம், களம்பூர், போளூர் என 3 பேரூராட்சிகளும், வருவாய் கோட்டமும், நகராட்சியாகவும் ஆரணி திகழ்கிறது. ‘
ஆரணி கோட்டத்தில் ஆரணி, போளூர், கலசப்பாக்கம் என மூன்று சட்டமன்ற தொகுதிகளும் இடம் பெறுகின்றன.
ஆரணி பாராளுமன்ற தொகுதியாகவும், இருக்கிறது. ஆரணியில் ரயில்வே நிலையமும் உள்ளது.
ஆரணி தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்பட்டால் மாவட்டத்தின் மைய பகுதியாக ஆரணி அமைவிடம் இருக்கும். இதனால் எப்பகுதி மக்களும் மிக சுலபமாக குறைந்த நேரத்தில் அலுவலக பணி ,வணிகம், மருத்துவம், கல்வி,வேலை வாய்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு சென்று வர முடியும், என காரணங்களாக தெரிவிக்கின்றனர்.
எனவே திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஆரணி புதிய மாவட்டமாக உருவாகி இதற்கான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என திடீரென்று பரவிய தகவலால் ஆரணி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.