தீ விபத்தில் சேதம் அடைந்த பஸ்சின் உரிமையாளருக்கு ரூ. 11 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு
Consumer Court Judgement தீ விபத்தில் சேதம் அடைந்த பஸ் உரிமையாளருக்கு ரூ. 11 லட்சம் இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
HIGHLIGHTS
Consumer Court Judgement
நாமக்கல்லில் தனியார் ஆம்னி பஸ் நடத்தி வருபவர் செந்தில்குமார் (56). அவருக்கு சொந்தமான பஸ்சை, மத்திய அரசின் பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ. 10 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் அந்த பஸ் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் பஸ் முழுவதுமாக எரிந்து சேதமானது. தீ விபத்தால் சேதமடைந்த பஸ்சிற்கு இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை ரூ. 10 லட்சம் வழங்குமாறு செந்தில்குமார், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் மனு கொடுத்துள்ளார். தீ விபத்திற்கு முன்னரே, பஸ் பர்மிட் காலாவதியாகவிட்டது போன்ற காரணங்களை கூறி இன்சூரன்ஸ் தொகை முழுவதையும் தர இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்து பாதி அளவு தொகையை தர ஒப்புக்கொண்டது.
இதனால் பாதிப்படைந்த பஸ் உரிமையாளர் செந்தில்குமார், இது குறித்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் இன்சூரன்ஸ் கம்பெனி மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று, மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். கொரோனா காலத்தில் பஸ் பர்மிட் போன்றவற்றை வாங்குவதற்கு இயலாத சூழ்நிலை இருந்ததால், விதி விலக்கு அளித்து மத்திய அரசின் போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்தநிலையில் தீ விபத்தில் சேதமடைந்த பஸ்சிற்கு முழு இன்சூரன்ஸ் தொகையை வழங்க மறுப்பது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
எனவே, இன்சூரன்ஸ் கம்பெனி, பஸ் உரிமையாளருக்கு 4 வாரத்தில், முழு இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை ரூ. 10 லட்சம் மற்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் சேர்த்து மொத்தம் ரூ. 11 லட்சம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தவறினால் ஆகஸ்ட் 2020 முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டு ஒன்றுக்கு 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.