கொல்லிமலையில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சுரங்க நீர் மின் திட்டப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் உமா, நீர்மின் திட்டத்திற்காக அமைக்கப்பட்டு வரும் சுரங்க பாதையில் அலுவலர்களுடன் சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும், கொல்லிமலை மாசிலா அருவியை பார்வையிட்டு, நீர் வரத்து குறித்தும், சுற்றுலா பயணிகளின் வருகை குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, எடப்புளிநாடு ஊராட்சி, செங்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை விபரங்கள், மருந்துகளின் இருப்பு, படுக்கை வசதிகள், நோயாளிகளின் வருகை விபரம் பதிவேடு உள்ளிட்ட விபரங்களை டாக்டர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் வருகை பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் விபரம், குழந்தைகளின் உயரம், எடை குறித்த விபரம் குறித்து அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார். அரியூர்நாடு ஊராட்சி, சோளக்காடு பகுதியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பயனாளியின் வீட்டை அவர் பார்வையிட்டார்.
பின்னர், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அக்கியம்பட்டி ஊராட்சி, கோனானூர் அரசு துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளிடம் உணவின் சுவை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.