பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழப்பு
பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
HIGHLIGHTS
சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்கத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த ஸ்ரீதர் ( வயது 40). என்பவர் பொன்னேரியில் தமது பணியினை முடித்து ரயில் மூலம் கும்மிடிப்பூண்டி செல்ல நேற்றிரவு பொன்னேரி ரயில் நிலையம் சென்றார்.
கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் ஏறுவதற்காக தண்டவாளத்தை கடந்த போது அதே ரயில் மோதி ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் ரயில்வே தண்டவாளங்களை கடக்க வேண்டாம் எனவும், மாற்றாக ரயில்வே மேம்பாலங்களை பயன்படுத்திட வேண்டும் என ரயில்வே காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.