மழையில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை
பழவேற்காட்டில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் தடுக்கும் விதமாக சிகிச்சை அளித்தனர்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியானது விவசாயத்தை முழு தொழிலாக செய்யும் பகுதிகளாகும். இங்கு நூற்றுக்கு 80 சதவீதம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அளவில் சாமந்தி, ரோஜா, மல்லி, வெண்டை, கத்திரி, முள்ளங்கி உள்ளிட்டவை பயிர்செய்து விவசாயிகள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
மிக்ஜம் புயல் காரணமாக பலத்த சூறைக்காற்றாலும், இடைவிடாது பெய்து கனமழையாலும் ஆரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரால் ஏரிகள் உடைபட்டு கிராமங்களுக்குள்ளும் விவசாய நிலங்களுக்குள்ளும் வரலாறு காணாத அளவிற்கு வெள்ள நீர் புகுந்தது. இதனால் கிராம மக்கள் உயிர் பிழைக்க மேடான பகுதிகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் கால்நடைகள் பெருமளவில் இதனால் பாதிக்கப்பட்டன.
பழவேற்காடு அருகே உள்ள பிரளயம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட போலாச்சி அம்மன் குளம் கிராமம் நீரில் மூழ்கியதால் சுமார் 30.க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகின. நூற்றுக்கணக்கான மாடுகள் நோய்வாய்ப்பட்டு கோமாரி நோய்க்கு ஆளாகியுள்ளதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மண்டல இணை இயக்குனர் சைத்துன் மற்றும் திருவள்ளூர் நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் கால்நடை பராமரிப்பு துறையினர் முகாமிட்டு கால்நடைகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த முகாமில் பொன்னேரி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் திருஞானம், கால்நடை உதவி மருத்துவர்கள் அனிதா, சித்ரா, ஆர்த்தி, கால்நடை நோய் புலனாய் பிரிவு கால்நடை உதவி மருத்துவர் செல்வ பிரியா, இலவச கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி கால்நடை உதவி மருத்துவர் ஜனனி,கால்நடை ஆய்வாளர்கள் மணிமேகலை, பிரபாவதி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் தனசேகர், முருகன், செல்வகுமாரி, ஜெயந்தி, ஆறுமுகம் உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.