திருவண்ணாமலை கோயிலுக்கு நிலதானம் அளித்த கல்வெட்டு கண்டெடுப்பு
திருவண்ணாமலை கோயிலுக்கு நிலதானம் அளித்த விஜயநகர ஆட்சிக் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் களப்பணியின்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் வட்டம், கடம்பூரில், விஜயநகர ஆட்சிக் கால திருவண்ணாமலை தானக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு, படியெடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன், பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா ஆகியோரால், மணலூர்பேட்டை அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில், ஸ்ரீவேம்பியம்மன் கோயில் எதிரில் உள்ள கற்பலகையில், விஜயநகர அரசர் சீரங்க மகாதேவர் காலத்திய கல்வெட்டு படியெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டு, சுமார் 8 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டது. முன்பக்கம் சூரியன் சந்திரன், திருவண்ணாமலையைக் குறிக்கும் முக்கோண வடிவிலான சிற்பம் மற்றும் பெரிய அளவு சூலமும் உள்ளது. பின்பக்கம் 40 வரிகளில் கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டு, விஜயநகர அரசர் சீரங்க மகாதேவரின் 3ஆம் ஆண்டில், அதாவது சக ஆண்டு 1497இலும், பொது ஆண்டு 1675 இல் வெட்டப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில், சீரங்க தேவ மகாராயர் உத்தரவுப்படி, செவ்வப்ப நாயக்கர் தருமமாக, வேட்டவலம் ஜமீனைச் சேர்ந்த தாண்டவ வாணாதிராயர், திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தின்போது நடைபெறும் ஏழாம் நாள் திருவிழாவிற்கு உபயமாக, முடியனூர் பற்றில் உள்ள கடம்பூர் கிராமத்தில், குறிப்பிட்ட நான்கு எல்லைக்குள் உள்ள நிலம் காணியாட்சியாக விடப்பட்டுள்ளது. இந்த நிலத்தைக் கைக்கொண்டு, ஒவ்வொரு வருஷமும், வேட்டவலம் வாணாதிராயர் திருக்கோயில் திருவிழாவிற்கு பொன்னும் நெல்லும் அளித்து திருவிழாவை நடத்தி வர வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தர்மத்திற்கு தீங்கு நினைப்பவர்கள், கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்திலே போகக்கடவார்கள் என்றும் ஒம்படைக்கிளவியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள கடம்பூர் கிராமத்து நிலத்தை, திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் திருவிழா நடத்த காணியாட்சியாக விட்ட செய்தியும், அந்த ஏற்பாட்டை வேட்டவலம் ஜமின்தார் செய்து வரவேண்டும் என்ற செய்தியும் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
திருவண்ணாமலை கோயிலுக்கு நிலதானம் அளித்த கல்வெட்டுகள், திருவண்ணாமலையைச் சுற்றி 60க்கும் மேற்பட்ட ஊர்களில் கிடைத்து வருகின்றன. இதிலிருந்து, திருவண்ணாமலை கோயிலும் ஊரும், எல்லா காலங்களிலும் சிறப்பும் முக்கியத்துவமும் பெற்றிருந்தது தெரியவருகிறது.