செய்யாறு - பெண்ணையாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படுமா?
செய்யாறு பெண்ணாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள ஒரு மாவட்டமாகும். மாவட்டத்தில் பிரதானமாக ஓடும் ஆறு செய்யாறு. ஜவ்வாது மலையில் உற்பத்தியாகி, மேற்கில் இருந்து தெற்காக செங்கம் அடைந்து, அங்கு வடகிழக்கில் திரும்பி மாவட்டம் முழுவதும் பயணிக்கிறது. ஜவ்வாது மலையில் உள்ள பீமன் ஆறு, மிருகண்டா நதி ஆகிய துணை ஆறுகள் போளூர் அருகே சோழவரத்தில் செய்யாற்றுடன் இணைகிறது. மேலும், ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத் தோப்பு அணையில் இருந்து வரும் கமண்டல நாகநதி, ஆரணி அடுத்த வாழைப்பந்தல் அருகே செய்யாற்றுடன் இணைகிறது.
அதன் பிறகு, ஒரு கிலோ மீட்டர் அகலத்தில் செய்யாறு அருகே வடக்கு நோக்கி பயணித்து, காஞ்சிபுரத்தை அடுத்த பழைய சீவரம் என்னும் ஊரில் பாலாற்றுடன் இணைகிறது. அதன்பிறகு பாலாறு, செய்யாறு இரண்டும் இணைந்த ஆறாக வங்காள விரிகுடாவில் சென்று கலக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை, வேளாண் நீர்ப்பாசனத்திற்கும் குடிநீருக்கும் மிகப்பெரிய ஆதாரமாக செய்யாறு விளங்குகிறது. ஆனால், இந்த ஆற்றில் இருகரையும் தொட்டு நீர் ஓடுவது எப்போதோ ஒருமுறை நடைபெறும் நிகழ்வாக இருக்கிறது. பருவமழை பொய்த்துப் போனதால், கடந்த காலங்களில் நான்கைந்து ஆண்டுகளில், ஓடை போல் தண்ணீர் ஓடும் நிலைதான் இருந்திருக்கிறது. இதனால் செய்யாற்றின் கரை ஓரமாக உள்ள போளூர், ஆரணி, செய்யாறு நகரங்களில் அவ்வப்போது குடிநீர் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.
கடந்த வாரம் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் பெய்த மழையின் காரணத்தினால் தற்போது அப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பியுள்ளன. அந்த மழையும் இல்லை என்றால் திருவண்ணாமலை மாவட்டம் கடும் வறட்சியால் பாசனத்திற்கும் குடிநீருக்கும் பொதுமக்கள் தள்ளாடும் நிலையில் தான் இருந்திருக்கும்.
தென்பெண்ணை ஆறு
கர்நாடகாவில் உற்பத்தியாகி, கிருஷ்ணகிரி வழியாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்து செல்லும் ஆறாக தென்பெண்ணை ஆறு விளங்குகிறது. இந்த ஆற்றின் குறுக்கேதான் சாத்தனூர் அணை கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் பல ஊர்களுக்கு பாசன வசதியும் குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு வருகிறது. இந்த தென்பெண்ணை ஆற்றை, செய்யாற்றுடன் இணைக்கும் பட்சத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பகுதிக்கு தண்ணீர் பிரச்சினையில் ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது விவசாயிகள் உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பாகும்.
இதற்கான முயற்சிகளை தமிழக அரசு 2008-2009 ஆண்டு முதலே எடுத்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள சாத்தனூர் அணையின் அதிகப்படியான உபரி நீர் எடுக்கப்பட்டு, தண்ணீர் பற்றாக்குறை உள்ள செய்யாறு, கிளியாறு, துரிஞ்சலாறு உபவடி நிலங்கள் பயன்பெறும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்தத் திட்ட அறிக்கை, டெல்லியில் உள்ள மத்திய நீர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு, 2012 -இல் போதிய நீர் ஓட்டம் இல்லாத காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் இந்தத் திட்டத்தினை மாநில அரசு நிதி மூலமே செயல்படுத்த சட்டசபையில் அறிவிப்பு செய்யப்பட்டது.
பின்னர், விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான அரசு ஆணை 2015 -இல் வழங்கப்பட்டது. மேலும், தேசிய நீரியல் திட்டத்தின் கீழ், 100 கோடி மதிப்பீட்டில் 2016 முதல் 2024 வரை 8 ஆண்டுகளில், பல்வேறு நீர் இணைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், பெண்ணையாறு உடன் செய்யாறு, பாலாறு இணைப்பு திட்டமும் உண்டு. 2017ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெண்ணையாறு – செய்யாறு இணைப்பு பணிக்கு ஆய்வினை மேற்கொள்ள ஒரு கோடியே ஐந்து லட்சம் நிதி அறிவித்தார். அதன்பின் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த 2021 சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது, தென்பெண்ணையாற்று உபரி நீரை செய்யாற்றுடன் இணைத்தால் செய்யாறு ஆறு பாயும் பகுதிகளில் விவசாயம் செழிக்கும் ,மக்கள் வளம் பெறுவார்கள் எனவே திமுக ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டத்திற்கு நடவடிக்கை எடுப்போம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதி கூறினார்கள்
இப்போதைக்கு, இந்த ஆய்வுப் பணிகள் உடனடியாக முடிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலங்களை விரைவில் கையகப்படுத்தி, உடனடியாக இணைப்புப் பணியை நிறைவேற்றினால், இரண்டு மாவட்டங்கள் (திருவண்ணாமலை, விழுப்புரம்) பயன்பெறும். அத்துடன், செய்யாருடன் இணைக்கும்பட்சத்தில், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சினையும், வேளாண் நீர்ப் பாசனப் பிரச்சினையும் ஓரளவிற்காவது தீர்க்கப்பட பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்த இணைப்புத் திட்டத்திற்கு தேவையான நிதியை விரைந்து ஒதுக்க நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது.