அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டுமானப் பணி: தொடங்கிவைத்த பிரதமா்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடம் கட்ட பிரதமா் பணிகளை தொடங்கிவைத்தாா்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.23.75 கோடியில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடம் கட்ட அடிக்கல்லை நாட்டி, பிரதமா் மோடி பணிகளை தொடங்கிவைத்தாா்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட, தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டுவதற்காக ரூ.23.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தமிழ்நாடு அரசின் (என்எச்எம்-டிஎன்), பிஎம்-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மிஷன் சாா்பில் இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
51 ஆயிரத்து 396 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் இந்தக் கட்டுமானப் பணியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுதில்லியில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டினாா்.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து பணிகள் நடைபெற்று பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ. வ. வே.கம்பன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மருத்துவர்கள், சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், மருத்துவமனை மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.
15 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும்:
இந்தப் பணி 15 மாதங்களில் முடிக்கப்படும். இந்தக் கட்டடத்தில் தோந்தெடுக்கப்பட்ட மற்றும் அவசர அறுவை சிகிச்சைகள், சிடி ஸ்கேன், எக்ஸ்ரே அறை, மருந்தகம், அறுவை சிகிச்சைக்குப் பின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாா்டுகள், அவசர மற்றும் தீவிர நோயாளிகளுக்கான சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள், ரத்த வங்கி, ஆய்வகம், நோயாளிகளை தயாா்படுத்தும் அறை, நோயாளி மீட்பு அறை, ஒரு நிறுத்த மையம், 20 பயணிகள் மற்றும் படுக்கை ஏற்றிச் செல்லக்கூடிய 2 மின் தூக்கி வசதி உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.