திருவண்ணாமலையில் இருந்து 3வது கட்டமாக வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
Third Time Rain Relief Material திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 3வது கட்டமாக ரூ26.4 8 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆட்சியர் அனுப்பி வைத்தார்.
HIGHLIGHTS
Third Time Rain Relief Material
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 3வது கட்டமாக ரூ 26.48 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அனுப்பி வைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கன மழை பெய்தது. அதனால், அந்த மாவட்டத்தில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் தொடர்ந்து மேற்கொண்டுள்ள மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் காரணமாக, அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிவாரணங்கள் திரண்டு வருகின்றன. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை ஊரக வளர்ச்சித் துறை வருவாய்த்துறை மகளிர் திட்டம் மற்றும் வியாபாரிகள் சங்கம், தன்னார்வ அமைப்புகளின் சார்பில் திரட்டப்பட்ட ரூ.17.29 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் முதற்கட்டமாக ஏற்கனவே சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, வருவாய்த்துறை சார்பில் திரட்டப்பட்ட ரூ.7.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை 2 வது கட்டமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆட்சியர் முருகேஷ் அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தில் இருந்து வியாபாரிகள் சங்கம், தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ.26.48 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் காலை 3 வது கட்டமாக திருவண்ணாமலையில் 3 லாரிகள் மூலம் கலெக்டர் முருகேஷ் அனுப்பி வைத்தார். அப்போது, ஆர்டிஓ மந்தாகினி, தாசில்தார் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதில், பிரட், பிஸ்கட், பால் பவுடர், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள், போர்வை பாய், தலையணை உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து வெள்ள நிவாரண பொருட்கள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து குவிந்து வருகிறது. எனவே, அவற்றை நாளை மீண்டும் நெல்லை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
விக்னேஷ் பன்னாட்டு பள்ளி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்புவதற்காக விக்னேஷ் பன்னாட்டு பள்ளியின் சார்பில், ரூ.3.7 இலட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் மதுமதி, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், ஆகியோரிடம் இன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, செய்யார் சார் ஆட்சியர்செல்வி. பல்லவி வர்மா, மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் உடன் இருந்தனர்.